மனிதர்களின் மனதிற்குள் உலகம் நுழைய உடலில் ஐம்புலன்கள் வாசல்களாக உள்ளன. அதில் அதிமுக்கியமானது உலகோடு நேரிடையான தொடர்பை ஏற்படுத்தும் கண்கள்தான்.
அது போல் இழப்பு என்பது என்ன? நம்மிடம் நமக்கு உரிமையாக இருந்த ஒன்று நம்மைவிட்டு மறைந்தோ அல்லது மறைவாகவோ போய்விடுவதுதானே.
உலகை காணவும் அதோடு ஒருங்கிணைந்து உறவாடவும் கண்கள் எத்தனை முக்கியம்.
உலகை கண்ட கண்கள் ஒளியிழந்து பார்வை குறைபாடு ஏற்பட்டால் உண்டாகும் துன்பம் எத்தகையது என்பது அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். இருப்பின் சுகம் இழப்பில்தானே தெரியும்.
அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்தான் சென்னையில் வசிக்கும் திரு. O. பிரபாகரன்.
அதுவும் இந்த இக்கட்டான பார்வை குறைபாடு அவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலுகையில் நிகழ்ந்தது.
தன்னுடைய வீட்டில் இதுபற்றி அவர் சொன்ன போது அதற்கு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கல்லூரி படிப்பை தவிர்க்கத்தான் பார்வை குறைபாடு என்ற ஆயுதத்தை அவர் பயன்படுத்துவதாகவே எண்ணியுள்ளார்கள்.
பல நாட்களுக்குப் பின்தான் அவருடைய பார்வை குறைபாடு அவரது இல்லத்தாருக்கு புரிந்தது. அதுவரையும் அந்தத் தடுமாற்றதுடனேதான் அவர் இருந்து வந்துள்ளார்.
பின்னர் கண் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டார். அப்போதுதான் தெரிந்தது சிறு வயதில் இருந்தே அவருடைய கண்கள் முழு ஒளியுடன் இயங்கவில்லை என்று. அவருக்கு நிரந்தரமாக மூக்குக் கண்ணாடி அணியும்படி அவருக்கு ஆலோசனையும் அதற்கான மருத்துவக் குறிப்புகளும் வழங்கப்பட்டது.
முதன்முதலாக கண்ணாடி அணிந்து இந்த உலகை ஒளியோடு கண்டபோது கண்களின் அருமை எத்தகையது என்று அவர் நன்கு உணர்ந்து கொண்டார். இதுவரை தான் கண்ட உலகத்திற்கும் இப்போது தான் காணும் உலகத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று வியப்படைந்துள்ளார். பூமியும் வானமும் இவ்வளவு ஒளியுடையதா! இத்தனை வண்ணம் கொண்டதா! என்று நெகிழ்ந்துள்ளார்.
அந்த வியப்பிலும் நெகிழ்விலும்தான் வாழ்வின் சிறப்பான ஒரு முடிவை அவர் எடுத்தார். தான் சம்பாதிக்கும் காலத்தில் தன்னுடைய முதல் செலவாக பார்வை குறைபாடு உள்ளவரும், அதை நீக்கிக் கொள்ள சிகிச்சை மேற்கொள்ள முடியாதபடி ஏழ்மையில் உள்ளவருமான ஒருவருக்கு மூக்குக் கண்ணாடி வாங்கித் தருவது என்று.
சிறப்பான இத்திட்டத்தை 1997-ம் வருடம் முதல் தொடங்கி, மாதம் ஒரு பார்வை குறைபாடு உள்ளவருக்கு கண் சிகிச்சையும் / மூக்குக் கண்ணாடியும் தன் சொந்த உழைப்பில் பெறும் ஊதியத்தின் முதல் செலவாக செய்து வந்து கொண்டிருக்கிறார்.
இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாக செய்ய அவரது நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அவர்களின் உதவியோடு சென்னை சவுகார்பேட்டையில் ஸ்ரீ மாத்ரு சேவா சங்கம் (SRI MAATHRU SEVA SANGAM) என்ற ஒரு அமைப்பை நிறுவி நடத்திக் கொண்டு வருகின்றார்.
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றான் பாரதி.
பலருக்கு கண்ணொளி வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி படைத்துக் கொண்டிருக்கின்றார் திரு. O. பிரபாகரன்.
மேலும் தகவலுக்கு: திரு. O. பிரபாகரன் - 9444623047