Sunday, December 18, 2011

ஒளி படைக்கும் கண்ணினாய்

மனிதர்களின் மனதிற்குள் உலகம் நுழைய உடலில் ஐம்புலன்கள் வாசல்களாக உள்ளன. அதில் அதிமுக்கியமானது உலகோடு நேரிடையான தொடர்பை ஏற்படுத்தும் கண்கள்தான்.

அது போல் இழப்பு என்பது என்ன? நம்மிடம் நமக்கு உரிமையாக இருந்த ஒன்று நம்மைவிட்டு மறைந்தோ அல்லது மறைவாகவோ போய்விடுவதுதானே.

உலகை காணவும் அதோடு ஒருங்கிணைந்து உறவாடவும் கண்கள் எத்தனை முக்கியம்.

உலகை கண்ட கண்கள் ஒளியிழந்து பார்வை குறைபாடு ஏற்பட்டால் உண்டாகும் துன்பம் எத்தகையது என்பது அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். இருப்பின் சுகம் இழப்பில்தானே தெரியும்.

அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்தான் சென்னையில் வசிக்கும் திரு. O. பிரபாகரன்.

அதுவும் இந்த இக்கட்டான பார்வை குறைபாடு அவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலுகையில் நிகழ்ந்தது.

தன்னுடைய வீட்டில் இதுபற்றி அவர் சொன்ன போது அதற்கு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கல்லூரி படிப்பை தவிர்க்கத்தான் பார்வை குறைபாடு என்ற ஆயுதத்தை அவர் பயன்படுத்துவதாகவே எண்ணியுள்ளார்கள்.

பல நாட்களுக்குப் பின்தான் அவருடைய பார்வை குறைபாடு அவரது இல்லத்தாருக்கு புரிந்தது. அதுவரையும் அந்தத் தடுமாற்றதுடனேதான் அவர் இருந்து வந்துள்ளார்.

பின்னர் கண் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டார். அப்போதுதான் தெரிந்தது சிறு வயதில் இருந்தே அவருடைய கண்கள் முழு ஒளியுடன் இயங்கவில்லை என்று. அவருக்கு நிரந்தரமாக மூக்குக் கண்ணாடி அணியும்படி அவருக்கு ஆலோசனையும் அதற்கான மருத்துவக் குறிப்புகளும் வழங்கப்பட்டது.

முதன்முதலாக கண்ணாடி அணிந்து இந்த உலகை ஒளியோடு கண்டபோது கண்களின் அருமை எத்தகையது என்று அவர் நன்கு உணர்ந்து கொண்டார். இதுவரை தான் கண்ட உலகத்திற்கும் இப்போது தான் காணும் உலகத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று வியப்படைந்துள்ளார். பூமியும் வானமும் இவ்வளவு ஒளியுடையதா! இத்தனை வண்ணம் கொண்டதா! என்று நெகிழ்ந்துள்ளார்.

அந்த வியப்பிலும் நெகிழ்விலும்தான் வாழ்வின் சிறப்பான ஒரு முடிவை அவர் எடுத்தார். தான் சம்பாதிக்கும் காலத்தில் தன்னுடைய முதல் செலவாக பார்வை குறைபாடு உள்ளவரும், அதை நீக்கிக் கொள்ள சிகிச்சை மேற்கொள்ள முடியாதபடி ஏழ்மையில் உள்ளவருமான ஒருவருக்கு மூக்குக் கண்ணாடி வாங்கித் தருவது என்று.

சிறப்பான இத்திட்டத்தை 1997-ம் வருடம் முதல் தொடங்கி, மாதம் ஒரு பார்வை குறைபாடு உள்ளவருக்கு கண் சிகிச்சையும் / மூக்குக் கண்ணாடியும் தன் சொந்த உழைப்பில் பெறும் ஊதியத்தின் முதல் செலவாக செய்து வந்து கொண்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாக செய்ய அவரது நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அவர்களின் உதவியோடு சென்னை சவுகார்பேட்டையில் ஸ்ரீ மாத்ரு சேவா சங்கம் (SRI MAATHRU SEVA SANGAM) என்ற ஒரு அமைப்பை நிறுவி நடத்திக் கொண்டு வருகின்றார்.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றான் பாரதி.

பலருக்கு கண்ணொளி வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி படைத்துக் கொண்டிருக்கின்றார் திரு. O. பிரபாகரன்.

மேலும் தகவலுக்கு: திரு. O. பிரபாகரன் - 9444623047

Sunday, December 11, 2011

பாலம்

மதுரை மத்திய சிறைச்சாலை. அதன் பக்கத்தில் ஒரு பள்ளி. அந்தச் சிறுவன் அப்பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தான்.

தினமும் சிறைச்சாலையை கடந்துதான் அவன் பள்ளிக்கு செல்ல வேண்டும். அப்படி செல்கையில் அங்கே தண்டனைக்காக கைது செய்து கொண்டு வரப்படுபவர்களையும், விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களையும் ஜாமினுக்காக அலைபவர்களையும் மற்றும் உள்ளே உள்ள தண்டனைக் கைதிகளை சந்திப்பதற்காக வந்திருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் அவன் கவனித்துக் கொண்டே செல்வான்.

குறிப்பாக, தண்டனைக்காக கைது செய்து கொண்டு வரப்படும் கைதிகளின் இறுகிய முகத்தையும் விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளின் இறுகிய முகத்தையும் கூடவே சென்று பார்ப்பான்.

என்ன குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பார்கள்? குற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும்? கோபத்தின் வெறுப்பின் உச்சநிலையில் மனம் தடுமாறி செயல்பட்டிருக்கலாமோ? அல்லது குடிபோதையில்...? இவர்களின் பிள்ளைகள், மனைவிமார்கள் உறவுகள் இதனால் எப்படி பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? சமூகத்தில் அவர்களது நிலை என்ன? என்றெல்லாம் அவன் சிந்திப்பான்.

சிறைச்சாலை வாசலில் நின்றிருக்கும் பெண்களின், குழந்தைகளின், பெற்றோர்களின் உறவினர்களின் வேதனையை அவர்களின் முகத்தைக் கண்டே உணர்ந்து கொள்வான். அவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு ஏதும் செய்ய அறியாது தவிப்பான். எப்படி செய்வது என்று தெரியாத அப்பருவத்தில் இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமே என்று மனதில் கவலைக் கொள்வான்.

வாழ்க்கைக்காக பள்ளியில் அவன் பாடப் புத்தகங்களைப் படித்தான். வாழ்க்கையைப் படிப்பதற்காக இந்த வேதனைகளைப் பாடங்களாக படித்தான்.

கிட்டத்தட்ட தன்னுடைய பதினாலாவது (14) வயது முதல் முப்பத்தி ஒன்றாவது (31) வயது வரை இதை அவன் கற்றுக் கொண்டே வந்தான்.

சரியாக முப்பத்திரண்டாவது (32) வயதில், 1991-ம் வருடத்தின் துவக்கத்தில் தன்னுடைய சிறைச்சாலை சேவையை துவக்கினார் பெரியவனாக ஆன அந்தச் சிறுவன். அவர் பெயர் திரு. இருதயராஜ்.

தினமும் காலை 7.30 மணிக்கு மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சென்று விடுவார். உள்ளிருக்கும் கைதிகளை சந்திக்க அங்கே வரும் கைதிகளின் உறவினர்களுக்கு தேவையான எழுத்துப் பூர்வமான உதவிகளைச் செய்வார். 8.30 மணிக்கு மேல் இலவச நேர்காணலுக்கான ஏற்பாடுகளை செய்வார். சிறைவாசிகளை சந்திக்க வந்திருக்கும் உறவினர்களின் நண்பர்களின் செல்போன்களை பாதுகாக்கும் பணியை செய்வார்.

சிறை அதிகாரிகளின் சிறப்பு அனுமதியின் பேரில் உள்ளே சென்று வெளியில் சந்திக்க முடியாமல் தவிக்கும் அவர்களது உறவினர்களின் செய்திகளை சிறைவாசிகளிடம் தெரிவிப்பார். இதன் மூலம் சிறைவாசிகளுக்கும் அவர்களது உறவுகளுக்கும் நண்பர்களுக்குமிடையே ஒரு இணைப்பு பாலமாக விளங்கினார்.

கோபத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் கண நேரத்தில் தவறிழைத்துவிட்டு சிறைக்குள் வந்து தன் குடும்பத்தாரின் நிலையையும் தன் நிலையையும் நினைத்து வருந்தி அழுபவர்களைத் தன்னுடைய அன்பான பேச்சினாலும், மென்மையான அணைப்பினாலும், துயரமாக வழிந்தோடும் அவர்களின் கண்ணீரைத் துடைத்தும் அவர் ஆதரவளித்தார்.

இது மட்டுமல்லாது சிறைவாசிகளின் குழந்தைகளின் நிலையை உணர்ந்து அவர்களுக்காக என்ன செய்வது என்று யோசித்து திரு. இருதயராஜ் மதுரையில் ஆரம்பித்ததுதான் “ABODE PRECIOUS CHILDREN HOME”.

சிறைவாசிகளின் குழந்தைகளின் வாழ்வு மேம்படவும் மென்மைபடவும் இது நடத்தப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. அவர்கள் மனதில் உள்ள குற்ற உணர்ச்சியை, முரட்டுத்தனத்தை போக்கவும், சமூகத்தில் எல்லோருடனும் சரி சமமாக பழகவும், பாதுகாப்பு உணர்வுடன் வாழவும் அவர்களுக்கு தேவையான போதனைகளை, வாழ்வியல் தேவைகளை திரு. இருதயராஜ் அவர்கள் வழங்கி அவர்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்.

சிறையில் ஒரு சம்பவம்.

உலகத்தின் மீதும் தன் மீதுமான வெறுப்பினால் ஒரு சிறைவாசி அங்கே யாருடனும் பழகாமல் பேசாமல் மிகவும் தனித்திருந்தார். சிறைக்குள் மற்றொரு தண்டனையாக தன் மனச்சிறைக்குள் தன்னை இருத்திக் கொண்டிருந்தார்.

அந்த நாளில் திரு. இருதயராஜ் அவர்கள் அப்போதைய முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதியிருந்தார். அதன் நகலை சிறைக்குள் நடந்த ஒரு விழாவின் போது வாசித்தார். அந்த வார்த்தைகள் விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்த மேற்கூறிய அந்த சிறைவாசியின் காதுகளில் விழுந்தது. அது அவரது மனதைப் புரிந்து எழுதப்பட்டதாகவும் அதற்கு ஆறுதல் அளிப்பதாகவும் உணர்ந்து கண்ணீர் விட்டு அழுது அப்படியே ஆழ்ந்து உறங்கிவிட்டிருக்கிறார்.

மறுநாள் திரு. இருதயராஜ் அவர்களிடம் அந்த சிறைவாசி தன்னுடைய மன இறுக்கத்தில் இருந்து தான் விடுபட்டதாகவும், வெகு நாட்களுக்குப் பிறகு நன்கு ஓய்வாக உறங்கியதாகவும் தெரிவித்து அவருக்கு நன்றி பாராட்டி உள்ளார். அதிலிருந்து அந்தச் சிறைவாசி மற்றவர்களோடு இயல்பாக பழக ஆரம்பித்தார்.

தனக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையிலும் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் தள்ளி தன்னுடைய சேவைப் பணிகளை விடாமல் செய்து வந்தார். அப்படியிருந்தும் அவருக்கும் ஒரு சோதனை வந்தது.

வருடம் 2008-2009 இடைவெளியில், திரு. இருதயராஜ் அவர்கள் சிறை ஊழியர்களில் / சிறை அதிகாரிகளில் சிலர் ஊழல் செய்வதை கண்டித்துள்ளார். இதைப் பொறுக்காதவர்கள் அவர் மேல் சில வீண் பழிகளைப் போட்டு தகாத சம்பவங்களை அரங்கேற்றினார்கள். (இவை பற்றி செய்திகள் அப்போதைய குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ளதாக தெரிவித்தார்).

பின் அவரை ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அவரை விடுவித்தார் குற்றம் இழைத்த அதிகாரி.

மனம் உளைச்சலினால் திரு இருதயராஜ் அவர்கள் சிறைச்சாலை சேவைகளை மட்டும் நிறுத்தி விட்டார்.

ஆனால் “ABODE PRECIOUS CHILDREN HOME” பணிகளை தன்னுடைய சிறுநீரக / இதய நோய்களை புறந்தள்ளி சீரிய முறையில் நடத்திக் கொண்டு வருகின்றார்.

சமுதாயத்தின் மீதும் சமுதாயத்தின் ஒரு பகுதியினரால் புறக்கணிக்கப்படும் குழந்தைகளின் மீதும் அக்கறை உள்ளவர்கள் செய்யும் உதவிகளை மட்டுமே கொண்டு இந்தத் தொண்டு நிறுவனம் திரு. இருதயராஜ் அவர்களால் நடத்தப்படுகின்றது.

மேலும் தகவலுக்கு: திரு. இருதயாஜ் - 9842193428